யாழ்.கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகனசாலை அமைக்க தீர்மானம்!

யாழ்.கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகனசாலை அமைப்பதற்கு நல்லுார் பிரதேசசபையின் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோம்பயன் மணல் மயானத்தில் மட்டுமே மின் தகன மேடை உள்ளது.
தற்போது கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், யாழில் உள்ள ஒரே மின் தகன மயானத்தில் சடலங்களை எரியூட்ட முடியாத நிலையில் சடலங்கள், யாழ்.போதனா வைத்திய சாலை, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை உள்ளிட்ட வைத்திய சாலைகளில் தேங்கி காணப்படுகின்றன.
இந்நிலையில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் புதிதாக மின் தகன மேடை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



