கேரள கடற்பரப்பில் ஆயுதம் கடத்திய சம்பவம் இலங்கையர் கைது

இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் விழிஞ்சம் ஆயுத வழக்கு தொடர்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்காரரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த அரசரத்தினம் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம் 25 ஆம் திகதி கேரளா கடற்கரையில் இலங்கை படகொன்றில் இருந்து ஐந்து AK47 துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் சென்னையில் வசிக்கும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
அதன்பிரகாரம் சின்ன சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேஷ் ராஜ் மற்றும் சவுந்தர் என்று அழைக்கப்படும் சவுந்தர் ராஜனிடம் தமிழ் நாடு கியூ பிரிவு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தது.
பின்னர் குறித்த இருவரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கொச்சி நகருக்கு அழைக்கப்பட்டு இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரசரத்தினம் ரமேஷ் முன்பு கைது செய்யப்பட்ட சுரேஷ் ராஜின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதங்கள், வெடிமருந்துகள் சேகரித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் சுரேஷ் ராஜிற்கு ரமேஷ் உதவி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



