சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வர முயற்சித்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வர முயற்சித்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணுக்கு உதவி செய்த நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி வயது-19 என்ற யுவதி 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்னைக்கு சென்று, 03 ஆண்டுகளாக உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பி வருவதற்காக தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்ட விரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடி அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னணியில் சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல திட்டமிட்ட பெண்ணும், அவர் வழங்கிய தகவலையடுத்து அவர் படகின் மூலம் செல்வதற்கு உதவி செய்த நால்வரும் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



