தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கும் புதிய சுற்று நிரூபம் வெளியானது..

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் நேற்றைய தினம் (07) வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் அரச சேவைகளிலுள்ள கொவிட் தொற்றாளர்கள், தொற்றுக்குள்ளாகி 10 நாட்களின் பின்னர் நோய் அறிகுறிகளோ அல்லது காய்ச்சலோ இல்லையெனில், எந்தவித பரிசோதனைகளும் இன்றி, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என அந்த சுற்று நிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருடன் நெருங்கி பழகியவர்கள், முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில், கொவிட் பரிசோதனைகளை நடத்தி, நோய் அறிகுறிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்திய சிகிச்சைகளை வழங்கும் சேவைகளில் ஈடுபடும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு, 3, 7 மற்றும் 10 நாட்களில் கொவிட் பரிசோதனைகளை செய்வதன் ஊடாக, தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களுக்கு, 14 நாட்களின் பின்னர் நோய் அறிகுறிகள் தென்படாத பட்சத்தில், கொவிட் பரிசோதனைகள் இன்றி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என புதிய சுற்று நிரூபத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



