கொழும்பில் தாயின் இறப்பை தாங்கமுடியாது 26 வயது மகன் எடுத்த விபரீத முடிவு

தனது தாய் மரணித்த செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலும் அங்கு வைத்து அவர் உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் குறித்த தொலைபேசி அழைப்பை அடுத்து, மிகவும் கவலையடைந்துள்ள இளைய சகோதரன், வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இளைஞன் 26 வயதுடைய, பல்கலைக்கழகமொன்றில் பொறியியல் துறையில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவித்த பொலிஸார், அவர் தாய் மீது மிக்க அன்பு செலுத்தியவர் என மூத்த சகோதரன் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



