பால் பசுக்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானம்

இலங்கை அரசாங்கம் மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பால்பசுக்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்தார்.
05 தனியார் நிறுவனங்களுக்கு இந்த அனுமதியை அளித்திருப்பதாகவும், அதற்கமைய 4200 பால்பசுக்களை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயத்துறை திணைக்களம் மற்றும் பால்உற்பத்தி,மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 2771 ஏக்கர் நிலப்பரப்பு பசுக்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
முழுமையான இந்தத் திட்டத்திற்கு 8275 மில்லியன் ரூபா முதலிடவுள்ளதாகவும் அவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள் செய்யும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டாகும்போது இலங்கை நாட்டை முற்றிலும் பால் உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்வதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான், ஒருதொகை பால்பசுக்களை இறக்குமதி செய்திருந்த போதிலும் அந்தத் திட்டம் அந்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



