ரிஷாட் வழக்கு விசாரணையில், நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த நபர்? – CID விசாரணைக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த ஹிஷாலினி ஜுட் குமார் என்ற சிறுமியின் உயிரிழப்பு தொடர்பிலான வழக்கு விசாரணைகள், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று (06) இடம்பெற்ற தருணத்தில், நீதிமன்றத்திற்கு வருகைத் தந்த நபரொருவர் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு, தனது கருத்துக்களை பதிவு செய்துக்கொண்டுள்ளமை தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், நீதிமன்றில் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த குறித்த நபரை நீதிமன்ற முன்னிலைக்கு வரவழைத்து, அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் செயலாளர் என அவர், நீதிமன்றத்திடம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, தான் ஊடகவியலாளர் என கூறி, குறித்த நபர் ஊடகவியலாளர் அடையாளஅட்டை ஒன்றை நீதிமன்றத்திடம் சமர்பித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என பர்ஷான் அமிர் என்ற குறித்த நபருக்கு நீதவான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமாயின், அது குறித்து முறைபாடு செய்யுமாறு, பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸிற்கு, நீதவான் கூறியுள்ளார்.
மேலும், சந்தேகநபரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாளஅட்டையின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.



