யாழில் பொது மக்களுக்கு உதவியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு மதவடி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அவ்வூர் மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.
குறித்த தகவலை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் , உதவி தொகை வழங்கியவர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த நபர் ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெளிநாட்டிலுள்ள மகன் 2 கோடி ரூபா பணம் அனுப்பியதாகவும், அதனை ஒருவருக்கு 2,000 ரூபா வீதம் விநியோகித்து வருவதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.



