விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர் காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் நேற்று (05) தனது 85வது வயதில் உயிரிழந்தார்.
1936ஆம் ஆண்டு பிறந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம், தபாலதிபராக பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு தபாலதிபராக கடமையாற்றிய அவர், 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
அன்றைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் தொடர்பான தீர்ப்பினை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



