உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை! -மஹிந்தானந்த

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாம் அனைத்து உணவு உற்பத்திகளையும் பொருளாதார மத்திய நிலையங்களின் ஊடாக கொள்வனவு செய்து பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்கி வீடுகளுக்கே பொருட்களை விநியோகம் செய்யும் பொறிமுறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
மரக்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மாவட்டச் செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து எந்தவொரு உற்பத்தியாளருக்கும் பிரச்சினை ஏற்பட வழியமைக்க மாட்டோம். இந்த பொறிமுறைமை சரியாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.



