வடக்கில் உள்ள 52 கோவிட் சடலங்களை அனுராதபுரம் அனுப்ப ஏற்பாடு!

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் 52 சடலங்கள் சேர்ந்துள்ளதால் அவற்றை வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு இடங்களில் மாத்திரமே மின் மற்றும் எரிவாயு உடல் தகனம் செய்யக்கூடிய வசதி காணப்படுகின்றன.
கோம்பயன்மணலில் ஒரு நாளைக்கு 4 - 5 உடலங்களையே எரியூட்டக்கூடியதாக இருக்கிறது. இதே நிலையே வவுனியா தகனசாலையிலும் காணப்படுகிறது.
ஆனால் தற்போது வடக்கு மாகாணம் முழுவதும் 52 கோவிட் சடலங்கள் சேர்ந்துவிட்டதால் அவற்றை அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையிலுள்ள தகனசாலைகளில் எரியூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 20 கோவிட் சடலங்கள் காணப்படுவதுடன், யாழ் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளையும் சேர்த்து 31 சடலங்கள் சேர்ந்துள்ளன.
கிளிநொச்சியில் 9 சடலங்களும், முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் 12உம் என மொத்தம் 52 சடலங்களை எரியூட்டவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இதனாலேயே நெருக்கடியைச் சமாளிக்க வடமேல் மாகாணத்திலுள்ள தகனசாலைகளில் இவற்றை எரியூட்டுவதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பத்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டமாக 10 சடலங்கள் வடமேல் மாகாணத்துக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் இவற்றில் 5 சடலங்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சடலங்களை பொலன்னறுவை ஹிங்குராகொடவிலுள்ள தகனசாலையில் எரியூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.



