சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், சகோதரி உட்பட 4 பேர் கைது

சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் சகோதரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சகோதரர்கள், 22 வயது சகோதரி மற்றும்
அப்பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மற்றுமொரு இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
14 வயதுடைய குறித்த சிறுமியை தந்தை கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், தனது தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சிறுமியின் மாமாவின் குடும்ப உறுப்பினர்களும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் மாமாவின் இரண்டு மகன்களும் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், அவர்கள் இருவரின் மூத்த சகோதரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை காதலித்ததாக கூறப்படும் 17 வயது இளைஞனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவ்விளைஞன் சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த இளைஞனின் பெற்றோரால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சிறுமி நாகோட பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுத்துறை தெற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.



