நாளாந்தம் சிறார்களின் ஒக்சிஜனின் அளவை அவதானிக்குமாறு அவசர கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகி, குணமடைந்த சிறுவர்கள், தோற்றத்தில் சிறந்த முறையில் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் ஒக்சிஜனின் அளவு குறைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (24) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு ஒக்சிஜனின் அளவு குறைவடையுமாக இருந்தால், சிறுவர்களுக்கு சுவாசிக்க முடியாத நிலைமை, பேச முடியாத நிலைமை, நடக்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
எனினும், கொவிட் தொற்றுக்குள்ளாகி, குணமடைந்த சிறார்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், ஒக்சிஜனின் அளவு குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஒக்சிஜனின் அளவு எந்தவித அறிகுறிகளும் இல்லாது குறைவடைவதற்கு Silent hypoxia என கூறப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான அறிகுறிகளை கொண்ட நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறந்த முறையில் விளையாடும் சிறார்களுக்கு, விளையாடும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஒக்சிஜன் குறையும் நிலைமையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
கொரோனாவிற்கு பின்னரான இவ்வாறான நிலைமையானது, மிகவும் பாரதூரமான நிலைமை என அவர் கூறுகின்றார்.
குறிப்பாக நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் சிறுவர்களின் இரத்தத்திலுள்ள ஒக்சிஜனின் அளவை கணிப்பிட்டுக் கொள்வது சிறந்தது என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
அவ்வாறு கணிப்பிடும் போது, ஒக்சிஜனின் அளவு 96 அல்லது 94 வீதத்திற்கு குறைவாக காணப்படுமாக இருந்தால், குறித்த சிறுவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பது அவசியம் என கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த தெரிவிக்கின்றார்.



