மட்டக்களப்பில் சட்டவிரோத மணலுடன் சென்ற வாகனத்திற்கு துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தசம்பவம் இன்று (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் சட்டவிரோத மணல் உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
எனினும் உழவு இயந்திரம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்று உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



