வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கௌரவ பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பதில் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார். தொடர்ந்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, உள்ளூராட்சி மன்றங்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தினார்.
அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் தமது சபைகளின் தேவைப்பாடுகள், சவால்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கட்டடங்கள், வாகனங்கள், கனரக வாகனங்கள், வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையால் இலங்கையில் ஏனைய மாகாணங்களில் ஒருவிதமான நடைமுறையும் வடக்கு மாகாணத்தில் வேறொரு விதமான நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது சபைகளுக்கு தெரியப்படுத்தி அதனை முன்னெடுக்குமாறும் கோரினர். உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



