ரணிலும் சந்திரிகாவும் மூலை முடுக்குகளில் கிசுகிசு கலந்துரையாடல்களை வைக்காது ஓய்வூதியத்துடன் ஒதுங்க வேண்டும்!

எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி தேர்தல் நடக்குமா என்பது தான். எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது உண்மை.
ஆனால் இந்த 8 மாதங்களுக்குள் எந்தப் பருப்பும் வேகாது. வெற்றி குறித்து எமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நாம் வெற்றி அடைந்து விட்டோம், என்றாலும் மக்கள் எதிர்த்தரப்பினர் குறித்து சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.
ஒருவேளை அநுர குமாரவுக்கு ஏதும் விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும் என்று எல்லோரும் கூறுவது அநுரவை காப்பாற்றுங்கள் என்று தான். பாதுகாப்பினை பலப்படுத்தக் கோருகின்றனர்.
ஏன் மக்கள் அப்படிக் கூறுகிறார்கள்? எதிரி குளம்பியுள்ளதை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, ஓய்வு பெற்ற சந்திரிக்கா வீட்டில் இருந்து ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டு வீடு வாசல்களைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தானே.
அப்படியல்லாமல் எல்லா மூலைமுடுக்குகளிலும் கிசுகிசு, கலந்துரையாடல்களை வைக்கின்றனர். இப்போ அவருக்கு ரணிலுடன் இருக்கும் பழைய கோபதாபங்கள் எல்லாம் மறந்து விட்டது போல.
மைத்திரியையும் வெறுத்திருந்தாரே. இப்போ மைத்திரி உடனும் கசமுசா. இப்போ அவருக்கு அத்தனகல்ல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஞாபாகம் வந்துள்ளது.
ஏன்? ஜேவிபி ஆட்சிக்கு வருவதுதான். அவர்களது ஒட்டுமொத்த அதிகாரமும் இல்லாமல் போகும் பயம் தான்” எனத் தெரிவித்துள்ளார்.



