தமிழர்களைப் பிரித்துப் பார்க்கமாட்டோம் என்கிறார் புத்த சாசன அமைச்சர்!
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு காரணம் கொண்டும் அரசாங்கம் என்ற வகையிலோ அமைச்சினாலோ மத ரீதியாக அல்லது மொழி ரீதியாக மக்களை, பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
அரசமைப்புக்கு இணங்க, பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேநேரம், ஏனைய மதங்களை ஒதுக்க வேண்டும் என்றோ அல்லது இரண்டாம் நிலைக்குத் தள்ள வேண்டும் என்றோ எங்கும் கூறப்படவில்லை.
தொல்பொருள் திணைக்களத்திற்குக்கூட, நாம் வடக்கு – கிழக்கில் பழுதடைந்துள்ள கோயில்களை புனர்நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளோம்.
இந்தாண்டுக்குள் நாம் இரண்டு கோயில்களை அடையாளம் கண்டுள்ளோம். இங்குள்ள இலட்சனைகள் வேறு எங்கும் இல்லாத காரணத்தினால், அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழ் மக்களை ஒருபோதும் பிரித்துப் பார்க்க மாட்டோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.