வறட்சியால் நீர் வற்றிய ஏரிகளை தோண்டி இரத்தினங்கள் எடுக்க அனுமதி

வறட்சியால் நீர் வற்றியபல நீர்த்தேக்கங்களில் இரத்தினக்கல் அகழ்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தர வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம், மின்சார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்தின் பிரகாரம், சமனலவெவ, மேல் கொத்மலை மற்றும் நோர்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கங்களில் இவ்வாறான அகழ்வுகளுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த நீர்த்தேக்கங்களில் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான இரத்தினக்கற்கள் இருப்பதாக இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை ஏற்கனவே மதிப்பிட்டுள்ளதாக குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.காமினி வலேபொட தெரிவித்தார்.
இருப்பினும், நீர்த்தேக்கங்களின் மதகு, நீர்த்தேக்கங்களின் தடுப்பணை, மின் உற்பத்திக்கான நீர் திறப்பு ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வருமானத்தை எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



