துறைமுக நுழைவாயிலை அமைப்பதற்காக தொல்லியல் கட்டிடத்தை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கோட்டை சைத்யா வீதியில் உள்ள 350-400 வருடங்கள் பழமையான தொல்லியல் கட்டிடத்தை இடித்து துறைமுகத்திற்கான அணுகு சாலையை இணைக்கும் முயற்சியை அதிகாரிகள் நிறுத்துமாறு துறைமுக பொது ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இக்கட்டடத்தின் ஒரு மதில் சுமார் ஏழரை அடி அகலம் கொண்டதாகவும், தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன கட்டிடமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதிலும், அது இடிக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிரோஷன் கோரகனகே கூறுகிறார்.
கட்டிடத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் நுழைவு வீதியை தயார் செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், தொல்பொருள் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்து அதற்கான அனுமதியை பெற்று கட்டிடத்தை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் செயலக வளாகத்தில் உள்ளதாகவும் துறைமுக அதிகாரசபையின் பல திணைக்களங்கள் அங்கு இயங்கி வருவதாகவும் கோரகனகே மேலும் தெரிவித்தார்.



