கொள்ளை சம்பவத்திற்கு பிறகு இங்கிலாந்து அருங்காட்சியக இயக்குனர் ராஜினாமா

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உள்ளது.
இங்கு பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு விலைமதிப்பு மிக்க பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு நடைபெறும் கண்காட்சியில் இவற்றை பார்வையிட ஏராளமானோர் வருவதுண்டு.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த கண்காட்சி நடைபெறவில்லை. இதற்கிடையே பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கலைப்பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பொருட்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் அருங்காட்சியக ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் திருட்டை தடுக்க தவறியதற்காக பிரிட்டிஷ் அருங்காட்சியக இயக்குனர் ஹார்ட்விக் பிஷ்ஷர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



