போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஐ.நா தூதர்

கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா சமீபத்தில் அங்கு உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப முயற்சித்தது. அதன் இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் வருகிற அக்டோபர் மாதம் அடுத்த உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வடகொரியா நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது வடகொரியா தொடர்பான பிரச்சினையில் சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதற்கு பதில் அளித்து ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்தர தூதர் கெங் ஷுவாங் கூறுகையில், `சீனா மற்றும் ரஷியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதிலாக பிரச்சினையை சரிசெய்வதற்கான திட்டங்களை வகுக்கலாம்.
இதற்காக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என அவர் தெரிவித்தார்.



