முந்தலம் பிரதேசத்தில் 15 வயதுடைய இரட்டைச் சிறுமிகள் மாயம்
முந்தலம் மங்கலஎலியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் 15 வயதுடைய இரட்டைச் சிறுமிகள் இருவர் நேற்று முன்தினம் (25) இரவு முதல் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மல்சிகா மற்றும் தில்ஷிகா என்ற இரு சிறுமிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முந்தலம் பொலிஸ் பரிசோதகர் அசித்த லக்ருவன் தெரிவித்தார்.
காணாமல் போன நாளுக்கு ஒரு நாள் முன்னதாக சிறுமி ஒருவர் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துவிட்டு தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார்.
சிறுமிகள் இருவரும் இந்த பயணத்திற்கு சென்று தாமதமாக வந்ததாக பொலிசார் கூறுகின்றனர். இந்த தாமதத்திற்கு இரு சிறுமிகளையும் தாய் கண்டித்துள்ளார்.
அக்காவும் அவர்களை கண்டித்துள்ளார். தாம் சந்திக்கச் சென்ற காதலன் தொடர்பில் சிறுமிகள் தமது தாயாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (25ம் தேதி) சுற்றுலா செல்வதற்காக சிறுமிகள் தங்கள் தாயிடம் ஐநூறு ரூபாய் கேட்டுள்ளனர். அதற்கு அம்மா எதிர்ப்பு தெரிவித்து, இந்த இரண்டு சிறுமிகளுக்கும் நூறு ரூபாய் மட்டும் கொடுத்தார்.
மதுரங்குளிக்கு செல்வதாக கூறி சிறுமிகள் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்துள்ளது.
இந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் தந்தை குடும்பத்தைக் கைவிட்டுச் சென்றதாகவும், இதன்காரணமாக தாயே குடும்ப பாரத்தை சுமந்துள்ளதாகவும் முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி ஒருவரின் கைத்தொலைபேசிக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதும் பதில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.