ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தல்!
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின்அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்களை விளக்கி ஸ்ரீலங்கா டெலிகொம் சமகி சேவக் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதன் பிரதிகள் பல்வேறு சமயத் தலைவர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் பிரதானி, மனித உரிமைகள் ஆணைக்குழு, தொழிலாளர் ஆணையாளர், ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி, தொடர்பாடல் வசதிகளை வழங்கிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், சுனாமி மற்றும் கொவிட் நிலைமைகளின் போது நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா டெலிகொம் பெற்ற இலாபம் குறித்தும் அந்த கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
IMF முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் கோரப்பட்ட போதிலும், இலாபகரமான தொலைத்தொடர்பு நிறுவனத்தை விற்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் இலங்கை மக்களுக்கு இலாபகரமாக தொடர்பாடல் சேவைகளை வழங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை இலங்கை மக்களுக்கான அரச நிறுவனமாக விட்டுவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.