இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தல்!
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) நேற்று (24.07) அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகர்கள் முக்கிய இரத்தினக்கல் சந்தைகளில் தேவையான உரிமங்கள் இன்றி ஈடுபடுவதால், துறையின் ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனா கோட்டை இரத்தினக்கல் சந்தை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் சட்டவிரோத வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவு செய்பவர்களின் பிரசன்னம் மற்றும் செல்வாக்கு உள்ளூர் இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனத்தின் ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
"இந்த சந்தைகள் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்தாலும், குறிப்பிட்ட சவால்களை முன்வைத்துள்ளதாகவும், இரத்தினங்கள், வைரங்கள் மற்றும் நகைத் துறையின் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகர்கள் என அழைக்கப்படுபவர்கள், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதியின்றி, வருகை வீசாவைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்து இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அந்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரசபையிடமிருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும். "இந்த உரிமம் பெறாத இரத்தின வர்த்தகம் இலங்கையின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்தும், ஏனெனில் இது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஆலோசனைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.