இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும் - ட்ரூடோ!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், அத்துமீறல்களும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
கறுப்பு ஜுலையின் 40ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன.
கறுப்பு ஜூலையின் கொடுமை, பதற்றத்தை அதிகரித்து சில தசாப்தங்கள் நீடித்த ஆயுதமோதலாக மாறியதுடன், இதன் விளைவுகளை சமூகம் தற்போதும் அனுபவிக்கின்றது.
சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்களுடனும் உலகம் எங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல்கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதை மீள வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.