குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை!
குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (21.07) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, குருந்தூர் மலை பௌத்தர்களுக்கு சொந்தமானது என வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளபோதும், அந்த பகுதி தமிழர்களுக்கு சொந்தமானது என தமிழ் அடிப்படை வாதிகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள் எனக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதி என ஏன் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சட்ட ஆலோசனைகளை பெற்று ஜயந்த சமரவீர முன்வைத்த யோசனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.