வீட்டுக் கடன் திட்டம் : மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த 11 அதிகாரிகள்!
மக்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய 11 அதிகாரிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபையில் பணிப்புரியும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், உள்பட ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 11 அதிகாரிகள் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக கடன்களை மீளப்பெறும் நடவடிக்கைகள் மந்தமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், அதனை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விரைவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களிலும் தணிக்கை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.