தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது -ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்!
தமிழ் அரசியல் கட்சிகள் சுயலாபம் கருதி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், தமிழ் தரப்புக்கள் கோரும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது எனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து தமிழ் தரப்புக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அவர், மேற்படி தெரிவித்துள்ளதுடன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது, பயனற்றது எனவும் கூறினார்.
இந்தியா தமிழ் மக்களின் விடயங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆகையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் குறித்து எடுத்துரைப்பார் எனவும் கூறினார்.
அத்துடன் 13 ஆவது சீர்த்திருத்தம், பாராளுமன்றத்தின் மூலம் அனுதிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் கூறினார்.
சமஷ்டி ஆட்சி என்பது நாட்டை துண்டாடும் செயல் என விமர்சித்த பிரசன்ன ரணதுங்க, இருக்கின்ற அரசியல் அமைப்பை மறுசீரமைத்து, நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.