ஆபத்தான குற்றச்செயலில் ஈடுபடும் அமெரிக்கா - வடகொரியா கண்டனம்!

கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை ஆபத்தான குற்றச்செயல் என வடகொரியா விமர்சித்துள்ளது.
இது நிறுத்தப்பட வேண்டும் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், உக்ரைனுக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்குவதற்கான அமெரிக்காவின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.
அது உலகை புதிய பேரழிவிற்குள் தள்ள முயற்சிக்கும் ஒரு ஆபத்தான குற்றச் செயல் எனவும், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது ஒரு கடினமான முடிவு எனக் கூறுவது கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவுகளை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுப்பை ஆரம்பித்ததை அடுத்து, வடகொரியா, மொஸ்கோவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



