பிக்குவின் காணொளி திட்டமிடப்பட்டது: புலம்பெயர்ந்தவர்களின் சதி! ஆனந்த சாகர தேரர் குற்றச்சாட்டு
தற்போதுள்ள பொருளாதார மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு மத்தியில் ஒரு துறவியிடம் இருந்து தெளிவான மற்றும் தூய்மையான குணத்தை மட்டுமே யாராவது எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது சரியான மனோநிலை இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய பிக்கு தொடர்பான காணொளி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் என்ற வகையில், இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்த நாங்கள் நிற்கவில்லை, எனவே, தெளிவான மற்றும் தூய்மையான குணாதிசயங்களை மட்டும் எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. மதத்துறவிகளிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க இயலாது.
அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை. சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்தமதத்துறவிகளின் கண்ணியத்தினையும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் குறைப்பதற்காகவே இவை அரங்கேற்றப்படுகின்றன.
அரசசார்பற்ற அமைப்புகள் சில இதனை முன்னெடுப்பதுடன் அதற்கான பெருமளவு நிதி புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பெறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக நாங்கள் தகவல்தொழில்நுட்ப துறையினருடன் இது குறித்து கலந்துரையாடினோம். அதனடிப்படையில் இந் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான திட்டமிட்டு நடாத்தப்படும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கமடைகின்றோம் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கமும் பொலிஸாரும் முடிவெடுக்க பல நாட்கள் எடுத்தன. அவர்கள் தாங்கள் நடவடிக்கை எடுக்காமல் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் வைரலாகும் வரை காத்திருந்தனர்," என்று அவர் மேலும் கூறினார்.