நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: மன்னாரில் சரத் வீரசேகரவிற்கு எதிராக சட்டத்தரணிகள் போர்க்கொடி
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு எதிராக மன்னார் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமுகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.
