கரும்பு பயிர்ச்செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய விக்னேஷ்வரன்!
வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், வவுனியாவில் கரும்பு வளர்ப்பதும், சீனித்தொழிற்சாலை அமைப்பதும் வடமாகாணம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாடும் பொருளாதார செழிப்பை அனுபவிப்பதற்கு வழிவகுக்காது என விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நான் முதலமைச்சராகப் பதவிவகித்தபோது, வடமாகாணத்தில் பாரியளவிலான கரும்பு பயிரிடல் செயற்திட்டம் எமது பரிசீலனைக்கு வந்தது. இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் செயற்திட்ட அறிக்கையைப் பரிசீலித்ததன் பின்னர், அச்செயற்திட்டம் வடக்கு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதால், அதனை நிராகரித்தோம் என சுட்டிக்காட்டிய அவர், கரும்பு ஓர் நீண்டகாலப் பயிராகும் (18 மாதங்கள்) எனவும், அதற்கு அதிகளவு நீர் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது வடமாகாண உலர்வலயம் தண்ணீர் பஞ்சத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண நீர்வளத்தை வற்றச்செய்யக்கூடிய செயற்திட்டத்தை எதற்காக நடைமுறைப்படுத்த முற்படுகின்றீர்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே இச்செயற்திட்டம் எதிர்வருங்காலத்தில் தமிழ்மக்களின் நல்வாழ்வை வெகுவாகப் பாதிக்கும் எனத் தெரிவித்த விக்னேஷ்வரன், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.