மனித புதைகுழி தொடர்பில் கருணா அம்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபையில் கஜேந்திரகுமார்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் மனித புதைகுழி தொடர்பில் விடுதலை புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா அம்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.