மூன்று பிள்ளைகளை பிரசவிக்க தயாரான நிலையில் கர்பிணித் தாய் உயிரிழப்பு!
ராகம வைத்தியசாலையில் 36 வயதுடைய கர்பிணித் தாயொருவர் மூன்று பிள்ளைகளை பிரசவிக்க தயாரான நிலையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெறுள்ளது.
திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து இவர் கருவுற்று இருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கணவர் தெரிவித்ததாவது, குழந்தைகளின் பிரசவத்திற்காக நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இருபத்தி மூன்று வாரங்கள் கருவுற்றிருந்தார்.
29 ஆம் திகதி அவர் கடுமையாக சிரமப்பட்டுகொண்டுருந்தார். 30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன. இந்த சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில், கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலையின் தவறினால் ஏற்பட்டதல்ல.
உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன. இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள்.
குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது. எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த தாயார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதுடைய லவந்தி சதுரி ஜயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.