ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடியை போக்க 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானின் உணவு நெருக்கடிக்கு உதவும் விதமாக, ந்தியா 10,000 மெட்ரிக் டன் கோதுமையை தாராளமாக வழங்கியுள்ளது. தனது டுவிட்டர் பதிவில் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக தெரிவித்திருக்கிறது. மனிதாபிமான காரணங்களுக்காக இந்திய அரசாங்கம் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அந்நாட்டிற்கு பாகிஸ்தானின் நில எல்லை வழியாக இந்தியாவிலிருந்து 40,000 டன் கோதுமை வழங்கப்பட்டது. உலக உணவுத் திட்டத்தின்படி, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் ஒன்றாகும். அங்கு 90 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், பசியாலும் வாடுகின்றனர். ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது, பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வதையும், பெண்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பங்கேற்பதையும் தடை செய்த தலிபான், அதன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதால் பிற நாடுகளின் உதவியை நாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



