அச்சுவேலியில் சமூக ஊடகங்களில் பெண்களின் படத்தை வெளியிட்ட இருவர் மீது மக்கள் தாக்குதல்
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடுகள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து எற்பட்ட கலவரத்தால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டனர் என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.
அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன், வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.