அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை!
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தகுதியுடைய தரப்பினருக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் வழங்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமர மத்துமகளுகே, நலன்புரி திட்டம் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் மேன்முறையீடுகளை ஜூலை 10ஆம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேன்முறையீடுகளை வழங்குவதற்கான கால அவகாசத்துக்கு முன்னர், அஸ்வெசும நலன்புரி திட்டம் செயற்படுத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் அறிவிக்க வேண்டும் என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.