அஸ்வெசும திட்டம் : ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக மஹிந்த உறுதி!
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.
பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில், சமூர்த்தி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போதே மகிந்த ராஜபக்ஷ மேற்படி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், 'சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதுடன், பயனாளர் தெரிவு விவகாரத்தில் அரசாங்கம் தவறிழைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்கள் நிவாரண செயற்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டள்ளமை வெளிப்படையாக தெரிகிறது எனவும், இந்த திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல விடயங்களை தெளிவுப்படுத்தினார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக உறுதியளித்தார் எனவும் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.