சீனத் தூதரகம் தொடர்பில் வெளியான போலிக்கடிதம்: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

இலங்கையின் கடனை ரத்துச்செய்ய முடியாது என சீனத் தூதரகம் கூறியதாக வெளியான போலிக்கடிதம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட இந்த போலி ஆவணம் குறித்து தூதரக அதிகாரி ஒருவர்,தன்னிடம் முறையிட்;டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் குறித்து விசாரணை நடத்த சீன அதிகாரிகள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தாம் கோரியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டு, 2023, ஜனவரி 18ஆம் திகதியிடப்பட்ட இந்தக் கடிதம்; சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.
இதன்படி தமது நாட்டின் பொருளாதாரம், இன்னும் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து மீளவில்லை. எனவே இலங்கைக்கான கடனை ரத்துச்செய்யமுடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், பின்னர், சீன தூதரகம் ஒரு ட்விட்டர் செய்தியில், குறித்த கடிதம் முற்றிலும் போலியான ஆவணம் என்று கூறியிருந்தது.



