சீனாவில் புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனிடையே சீன அரசு, ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ (Zero Covid policy) என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கடந்த காலங்களில் இந்த திட்டம் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2020 ஆம் ஆண்டைப் போல சீனாவில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



