தேசிய அரசிலும் பிரதமராக மகிந்தவே, வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்படாது - பசில் திட்டவட்டம்

தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனவும், மாற்று தெரிவுகள் இருக்காது எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து மாகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தேசிய இணக்கப்பாடு அரசாங்கம் குறித்து அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை அடுத்த பிரதமர் பதவிக்கு பரிந்துரைப்பது என்ற கேள்வியை கட்சி உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேறு எவரதும் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது எனவும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையே பரிந்துரைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



