தாலிபான் அரசுக்கு உதவி வழங்க தயார் ஆகும் சீன அரசு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் அரசை ஆதரிக்க அமெரிக்கா அவசரம் காட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாலிபான்கள் அரசை சீனா அங்கீகரித்துள்ளது. மேலும் தாலிபான் அரசுக்கு 31 மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் சீனா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இடைக்கால ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி என சீனா தெரிவித்துள்ளது. ஆப்கானில் 3 வார கால குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆப்கான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும் ஆப்கான் மண்ணில் இருந்து அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் வேரறுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள், தடுப்பூசிகள் என 31 மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே தாலிபன்களின் அரசை ஆதரிக்க அமெரிக்கா அவசரம் காட்டாது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் எஞ்சி இருக்கும் அமெரிக்கர்களை மீட்பது குறித்து தாலிபான்களுடன் பேசிவருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் தற்காலிக உள்துறை அமைச்சராக இருப்பவர் ஹக்கானி அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.



