கியூபாவில் பாரிய போராட்டம். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கியூபாவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறியுள்ளதாகத் தெரிவித்து கியூபாவில் பாரிய போராட்டம் முன்னடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (11) ஹவானாவிலிருந்து சான்டியாகோ வரை பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அந்நாட்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
கடந்த 30 வருடங்களில் இல்லாதவாறு தற்போது பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
San Antonio de los Banos நகரில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒன்றுகூடி சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பேரணியில் இணைந்திருந்தனர்.
இதனிடையே போராட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு தமது ஆதரவாளர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.