புங்குடு தீவு மாணவி வித்யா கொலை வழக்கில் இருந்து பிரதமர் நீதியரசர் விலகல்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பிரதம நீதியரசர் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் மரணம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர்கள் தாக்கல் செய்த மேன் முறையீடுகள் நேற்று (06.04) எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.
இதன்போது ஐவர் அடங்கிய அமர்வின் தலைவர் நீதியரசர் எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார்.
அதன்பிறகு, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் ஜூலை 30-ம் திகதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு-பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மிஸ் சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள குறைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மொழிமாற்றப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ஆம் திகதி அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்தந்த பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.