தோட்டதொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தற்போதைக்கு அதிகரிக்க முடியாது : தோட்டகாரர்கள் சங்கம்!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அவ்வாறு செய்ய முடியாது என இலங்கை தோட்டக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாக 1,700 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை தோட்டக்காரர்கள் சங்கத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, தற்போதைக்கு உரிய சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையில் மிக வேகமாக நஷ்டமடைந்து வருகின்றது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.