மக்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடாமல் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் - ரணில்!
மீண்டும் போராட்டங்களில் ஈடுபடாமல் நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் 'ITC ரத்னதீப' சொகுசு ஹோட்டலை இன்று (25.04) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் மிகப் பெரிய போராட்டம் இடம்பெற்றது. ஆனால் தற்போது இந்த பகுதியில் மிகப் பெரிய ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடத்தில் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கு பதிலாக புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமம் இந்தியாவிற்கு வெளியே தங்களது முதல் சொகுசு ஹோட்டலைக் கட்டியுள்ளது.
இதற்காக செய்யப்பட்ட முதலீடு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 350 ஹோட்டல் அறைகள் உள்ளன. இரண்டு பிரதான கோபுரங்களை இணைத்து வானத்தில் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள வான் பாலம் இந்த நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு” எனத் தெரிவித்துள்ளார்.