தேர்தல் வரும்போதெல்லாம் பூச்சாண்டி அரசியலை பார்க்கிறோம் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
தேர்தல் வரும்போதெல்லாம் பூச்சாண்டி அரசியலை பார்க்கிறோம் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி!

விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது. அதற்கு நாம் அனுமதிக்க முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று தேவையில்லை என உல‌மா க‌ட்சி ம‌ற்றும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.  

முஸ்லீம்கள் மத்தியில் கூட தீவிரவாதம் தேவையில்லை.எதிர்காலத்தில் இந்நாட்டில் உள்ள சிங்கள மக்களுடன் சம வாய்ப்புக்களை தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதே எமது கருத்தாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்கால தேர்தல் விடயம் குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை இன்று (18.04) தனது அலுவலகத்தில் நடாத்திய வேளை அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

.இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேர்தல் என்ற ஒன்று வருகின்ற போது கால காலம் பூச்சாண்டி அரசியல் கண்டு வருகின்றோம். 

விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்கப் போகின்றோம் என்ற ரீதியில் தமிழரசுக்கட்சியினர் பேசுவார்கள். முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என முஸ்லீம் காங்கிரஸ் மக்களை உசுப்பேத்துவார்கள். இந்த நாட்களில் விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்ப்பிப்பார்கள் என்று இதுவரை நினைக்கவில்லை.  

ஆனால் தமிழ் மக்களதும் முஸ்லீம் மக்களுக்குமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று தேவையில்லை. முஸ்லீம்கள் மத்தியில் கூட தீவிரவாதம் தேவையில்லை. 

எதிர்காலத்தில் இந்நாட்டில் உள்ள சிங்கள மக்களுடன் சம வாய்ப்புக்களை தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதே எமது கருத்தாகும். விடுதலைப் புலிகள் ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து எமக்கு தெரியாது .அதனை தமிழ் தரப்பினர் தான் கூற வேண்டும். 

ஆனால் ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தமை உண்மை. சிறுவர்களை கடத்தினார்கள் என்றும் கூற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கடந்த யுத்த காலங்களில் கடத்தல் என்பது பல தரப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தடி எடுத்தவர்கள் எல்லாம் சண்டைக்காரன் போன்று விடுதலைப்புலிகள் மட்டுமல்ல ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களும் அக்கால கட்டங்களில் செயற்பட்டிருந்தன. இவ்விடயங்கள் தெளிவாக ஆராயப்பட வேண்டும். 

யுத்தம் என்பது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்த காரணத்தினால் நேரடி ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடாது இரகசியமான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். இவ்விடயங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களது கருத்துக்களில் இருந்து பெற முடியும். அதை பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.  

காரணம் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விட்டது.தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை என்பது இன்னும் சீரற்றதாகவே உள்ளது.விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது.அதற்கு நாம் அனுமதிக்க முடியாது.1983 ஆண்டு தமிழ் மக்களின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டிருந்தது.

இக்காலப்பகுதியில் சிறந்த தமிழ் வியாபாரிகள் கூட நாட்டை விட்டு வெளியேறிய சந்தரப்பம் ஏற்பட்டது.இதனால் பொருளாதாரம் அதால பாதாளத்தினுள் விழுந்தது.இந்த நாடு பொருளாதாரத்தில் வளம் பெற வேண்டும் என்றால் முதலில் இனவாத சிந்தனை ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.