வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் வாள்கள் மற்றும் தங்கத்துடன் கைது...

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த நால்வர் வாள் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் வாள்களுடன் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கி சுமார் 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பின்னர், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கொள்ளையர்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கொள்ளைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் இவர்கள் பங்குபற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் இணுவில் பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடையவர்களாவர்.
அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..