நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போயிங் நிறுவனம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கொத்து, கொத்ததாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' நிறுவனமும் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விமானங்கள் மட்டும் இன்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வரும் போயிங் நிறுவனம், சமீப ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் இரண்டு, 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதும், இந்த விபத்துகளுக்கு விமானத்தின் வடிவமைப்பே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததும் போயிங் நிறுவனத்துக்கு பேரடியாக அமைந்தது.
இந்த நிலையில் போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..